திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் 100 கிலோ மலர் அலங்காரம்
அலங்காரத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட திருப்பதி ஏழுமலையானுக்கு, காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களிலும் அழகிய மலர் மாலைகள் சாத்தப்படுகின்றன. அன்றாட அலங்காரத்திற்கு 12-க்கும் மேற்பட்ட மலர்கள், துளசி, தவனம் உள்ளிட்ட 6 வகை இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சாதாரண நாட்களில் மூலவருக்கு 100 கிலோ மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக ஒவ்வொரு வியாழக்கிழமையும், ஏழுமலையானுக்கு முழுமையாக மலர்களால் மட்டும் அலங்காரம் செய்யப்படுகிறது. இது “பூ அங்கி சேவை” என அழைக்கப்படுகிறது; இந்த நாளில் 200 கிலோ மலர்கள் தேவைப்படுகிறது.
திருவாய்மொழியில் நம்மாழ்வார், ஏழுமலையானுக்குச் சாத்தப்படும் மலர் மாலைகளை மிகுந்த பக்தியுடன் விவரித்துள்ளார். ஒவ்வொரு மாலைக்கும் தனிப்பட்ட பெயர் உள்ளது.
சிகாமணி மாலை, சாலைக்கிராம மாலை, கண்டசரி மாலை, வக்ஷஸ்தல மாலை, சங்கு மாலை, சக்கர மாலை, தாவள மாலை, திருவடி மாலை உள்ளிட்ட பல்வேறு மலர் மாலைகளால் தினமும் மூலவர் அலங்கரிக்கப்படுகிறார்.
வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஏழுமலையானை தரிசிப்பதன் மூலம் பக்தர்கள் ஆன்மீக மகிழ்ச்சியில் மூழ்குகின்றனர்.





