தெலங்கானாவில் லாரி–பேருந்து மோதல்: மூன்று மாத குழந்தை உட்பட 20 பேர் பலி
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஆர்டிசி பேருந்து மீது டிப்பர் லாரி மோதி, மூன்று மாத பெண் குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மிர்ஜாகுடா – கானாபூர் சாலையில் காலை 7.30 மணியளவில், இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆர்டிசி பேருந்தை மோதியதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. கடும் தாக்கத்தில் பேருந்து முன்பகுதி நொறுங்கி பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
செவெல்லா அரசு மருத்துவமனை நிர்வாகி டாக்டர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்ததாவது:
“இந்நிகழ்வில் 20 பேரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. சிறு காயங்களுடன் உள்ள ஆறு பேர் செவெல்லா சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர காயமடைந்தவர்கள் பட்டினம் மஹிந்திரா ரெட்டி மருத்துவமனை மற்றும் பாஸ்கர் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்” என்றார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, காயமடைந்தோருக்கு உடனடி சிகிச்சை வழங்க உத்தரவிட்டார். மேலும் ஹைதராபாத் காந்தி மருத்துவமனை மற்றும் உஸ்மானியா பொது மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை வசதிகள் தயாராக இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் தாமோதர் ராஜ நரசிம்மா, மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, தீவிர காயமடைந்தவர்களை தாமதமில்லாமல் ஹைதராபாத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக அரசு கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான தகவல்களுக்கு 9912919545 மற்றும் 9440854433 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.