“நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதே லட்சியம்” – புதிய முப்படைத் தலைமை தளபதி ராஜா சுப்ரமணி உறுதி!
இந்தியாவின் புதிய முப்படைத் தலைமை தளபதியாக (Chief of Defence Staff – CDS) ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். முப்படைத் தலைமை தளபதியாக இருந்த அனில் சவுஹானின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய சி.டி.எஸ்-ஆக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டார். டெல்லியில் நடைபெற்ற இந்த கம்பீரமான பதவியேற்பு நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்ட அவர், “இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் (Territorial Integrity) பாதுகாப்பதில் நான் எப்போதும் உறுதிபூண்டுள்ளேன்” என்று தேசத்திற்கு உறுதியளித்தார்.
முன்னதாக, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்கு (National War Memorial) சென்ற புதிய தலைமை தளபதி, நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து வீராஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவருக்கு முப்படையினரின் கம்பீரமான ராணுவ அணிவகுப்பு மரியாதை (Guard of Honour) அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் மிக உயரிய முப்படைத் தலைமை தளபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் தமக்கு மட்டற்ற பெருமை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
முப்படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் தற்சார்பு: ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகிய அனைத்தையும் ஒரே நேர்க்கோட்டில் ஒருங்கிணைத்து, இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.
தொடர்ந்து பேசிய அவர், ‘தற்சார்பு இந்தியா’ (Atmanirbhar Bharat) திட்டமே நமது நாட்டின் பாதுகாப்பிற்கு மிக முக்கிய மையத் தூணாகத் திகழ்கிறது என்று சுட்டிக்காட்டினார். இதனால், நமது ஆயுதப்படைகளில் (Armed Forces) உள்நாட்டிலேயே முழுமையாகத் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்களைச் சேர்ப்பதையும், அவற்றைப் பயன்படுத்துவதையும் முன்னுரிமை கொடுத்து விரைவுபடுத்துவோம் என்றும் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி மிகவும் அழுத்தமாகத் தெரிவித்தார். எல்லைகளில் அச்சுறுத்தல்கள் நிலவி வரும் வேளையில், புதிய முப்படைத் தலைமை தளபதியின் இந்த அதிரடி உரை ராணுவ வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





