கோவை அருகே கொடூரம்: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை – கார்த்தி, மோகன்ராஜ் கைது; உறவினர்கள் காவல்நிலையம் முற்றுகை!
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. சூலூர் அடுத்த கிராமத்தைச் சேர்ந்த இந்த சிறுமி, நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததைத் தொடர்ந்து, இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று அந்த கிராமத்தில் உள்ள குளக்கரை பகுதியில் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததால், அவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சிறுமியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், தனிப்படை அமைத்து நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி மற்றும் அவனுக்கு உடந்தையாகச் செயல்பட்ட மோகன்ராஜ் ஆகிய இருவரை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்க வலியுறுத்தி, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரளான பொதுமக்கள் ஆதரவுடன் சூலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விடிய விடியப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் உறவினர்கள், “கைது செய்யப்பட்டுள்ள காமுகர்களை எங்களிடம் நேரில் காட்ட வேண்டும்; அவர்களுக்குக் கடுமையான மரண தண்டனை வழங்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம்” என ஆக்ரோஷமாகத் தெரிவித்தனர். இந்தத் துயரச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.




