அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் திடீர் ராஜினாமா: புதிய இயக்குநராக ஆரோன் லூகாஸை நியமித்து அதிபர் டிரம்ப் உத்தரவு!
வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் (Director of National Intelligence – DNI) பதவியை விடுத்துத் தான் ராஜினாமா செய்வதாகத் துளசி கப்பார்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்று மீண்டும் அதிபரானதைத் தொடர்ந்து, நாட்டின் மிக முக்கியப் பாதுகாப்புப் பதவியான தேசிய உளவுத்துறையின் இயக்குநராகத் துளசி கப்பார்ட் நியமிக்கப்பட்டார். இந்தச் சூழலில், அவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருப்பது சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
தனது இந்தத் திடீர் விலகல் குறித்துத் துளசி கப்பார்ட் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கையில், “எனது கணவர் ஆபிரகாமுக்கு அண்மையில் எலும்புப் புற்றுநோய் (Bone Cancer) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; இந்த இக்கட்டான மற்றும் சவாலான சூழ்நிலையில் அவருக்குப் பக்கபலமாக இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியது எனது கடமையாகும். எனவே, அவருடன் இருப்பதற்காகவே எனது பொதுப்பணியில் இருந்து நான் தற்காலிகமாக விலகுகிறேன்” என்று தனது குடும்பச் சூழலை விளக்கியுள்ளார்.
துளசி கப்பார்ட்டின் இந்த அதிரடி ராஜினாமாவைத் தொடர்ந்து, அமெரிக்க உளவுத்துறையின் புதிய இயக்குநராக ஆரோன் லூகாஸ் என்பவரை நியமித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனடியாக உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாகத் தனது எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், “துளசி கப்பார்ட் அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் மிகச்சிறந்த மற்றும் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார். இந்த இக்கட்டான சூழலில் தனது கணவரை மீண்டும் நல்ல ஆரோக்கியத்திற்குக் கொண்டு வர வேண்டும் என அவர் எடுத்துள்ள முடிவு முற்றிலும் சரியானது; ஆபிரகாம் விரைவில் இந்த நோயில் இருந்து குணமடைந்து முழு ஆரோக்கியத்தைப் பெற இறைவனை வேண்டுகிறேன்” என்று தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் பதிவு செய்துள்ளார்.





