விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் உச்சக்கட்ட பதற்றம்: உள்ளே செல்ல முயன்ற சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் – போலீசாருடன் பயங்கர தள்ளுமுள்ளு!
விழுப்புரம்:
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்பினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியே போர்க்களமாக மாறியுள்ளது.
அதிமுகவில் புதிய பிளவு:
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள சூழலில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் மற்றொரு அணியும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றன.
பதவிப் பறிப்பும் புதிய நியமனமும்:
இந்த உட்கட்சி மோதலின் அதிரடி நடவடிக்கையாக, எடப்பாடி பழனிசாமி தரப்பு எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்டோரின் முக்கியக் கட்சிப் பொறுப்புகளை அதிரடியாகப் பறித்து, அவர்களுக்குப் பதிலாகப் புதிய நிர்வாகிகளை நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, சி.வி. சண்முகத்தின் கோட்டையாகக் கருதப்பட்ட விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளராக, அண்மையில் அதிமுகவிலிருந்து வெளியேறியிருந்த விழுப்புரம் நகரக் கழகச் செயலாளர் பசுபதி என்பவரை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.
போலீசாருடன் தள்ளுமுள்ளு:
புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தைக் கைப்பற்றுவதில் இருதரப்பிற்கும் இடையே மோதல் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவியது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் பெரும் திரளாகத் திரண்டு வந்து, மாவட்டத் தலைமை அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். ஆனால், சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைக் காராணம் காட்டி அவர்களைப் போலீசார் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் விழுப்புரம் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நீடித்து வருகிறது.




