சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு மக்கள் தக்க பதிலடி தந்துவிட்டனர் – ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா காட்டம்!
புதுடெல்லி: சனாதனம் குறித்துத் தொடர்ந்து பேசி வரும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலேயே மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துவிட்டதாக ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொஸ்பேலா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் தொடர்பாக டெல்லியில் தனியார் செய்தி நிறுவனத்திடம் அவர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சனாதனம் ஒருபோதும் அழிந்துவிடாது என்பது உறுதி; அதுவே இந்த நாட்டின் ஆன்மாவும் உயிர்த்துடிப்பும் ஆகும். உதயநிதியின் கருத்துக்களுக்கான பதிலை மக்கள் தேர்தல் முடிவுகளின் மூலம் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டனர்” என்று கூறினார்.
தொடர்ந்து சனாதனத்தின் பெருமைகளை விளக்கிய அவர், சனாதனம் என்பது ஒரு பிரம்மாண்டமான ஆலமரம் போன்றது என்றார். “ஆண்டாண்டுகள் கடந்தாலும் அந்த மரம் கம்பீரமாக நிலைத்து நிற்கும். அதன் வேர்கள் மிகவும் ஆழமாகவும், வலிமையாகவும் வேரூன்றி இருப்பதால், சனாதனம் என்றுமே புத்துணர்ச்சியோடு தான் இருக்கும்” என தத்தாத்ரேயா ஹொஸ்பேலா உறுதிபடத் தெரிவித்தார். சனாதனம் குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.





