தவெக அரசு தப்பிக்குமா? தமிழக சட்டப்பேரவையில் இன்று அதிரடி நம்பிக்கை வாக்கெடுப்பு!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டப்பேரவையில் நடைபெறுகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம், தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. முதலமைச்சராக விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. இதில் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை தீர்மானத்தைக் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்த உள்ளார். இந்த வாக்கெடுப்பில் சட்டமன்ற உறுப்பினர்களில் சரிபாதிக்கும் அதிகமானோர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். தவெக அரசுக்கு ஆதரவாக சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்றைய வாக்கெடுப்பு தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.






