ஆட்சி மாற்றம்: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அரசின் தலைமை வழக்கறிஞர் (Advocate General) பி.எஸ்.ராமன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றபோது, ஆர்.சண்முகசுந்தரம் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, 2024-ம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் புதிய தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். தற்போது தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், பி.எஸ்.ராமன் முறைப்படி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான தனது ராஜினாமா கடிதத்தைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ளார். இதற்கு முன்னதாக, கடந்த 2009 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்திலும் பி.எஸ்.ராமன் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாகப் புதிய தலைமை வழக்கறிஞர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






