மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைய வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தகவல்!
மேற்கு வங்க மாநிலத்தின் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (ஏப்ரல் 29, 2026) நிறைவடைந்த நிலையில், அங்கு பாஜக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிப் புதிய ஆட்சியை அமைக்கும் எனப் பல்வேறு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) தெரிவித்துள்ளன. IANS – Matrize கணிப்பின்படி, பாஜக கூட்டணி 146 முதல் 161 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 125 முதல் 140 இடங்களைப் பெற்று ஆட்சியை இழக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், P-Marq மற்றும் Praja Poll ஆகிய நிறுவனங்கள் பாஜகவிற்கு முறையே 150-175 மற்றும் 178-208 இடங்கள் வரை கிடைக்கும் என ஒரு மிகப்பெரிய வெற்றியை முன்மொழிந்துள்ளன.
மற்றொருபுறம், ஜே.வி.சி டைம்ஸ் நவ் கணிப்பானது பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே மிக நெருக்கமான போட்டி இருக்கும் என்று குறிப்பிட்டாலும், பாஜக 138 முதல் 159 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்கும் எனத் தெரிவித்துள்ளது. Poll Dairy கணிப்பும் பாஜக 142 முதல் 171 இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த அனைத்துக் கணிப்புகளுமே காங்கிரசுக்கு மிகக் குறைவான இடங்களையே ஒதுக்கியுள்ளன. மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு இம்முறை கடும் சவால் ஏற்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான தேர்தல் முடிவுகள் வரும் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் போது மட்டுமே, வங்கக் கரையில் தாமரை மலருமா அல்லது மம்தா மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்பாரா என்பது உறுதியாகத் தெரியும்.





