திமுகவினர் ஆபாசப் பேச்சு: பெண் தற்கொலை செய்துகொண்டதால் மண்ணச்சநல்லூரில் உறவினர்கள் சாலை மறியல்!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுகவினர் ஆபாசமாகப் பேசித் தாக்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான சிந்துஜா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுதியின் திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்கள் வீடு வீடாகச் சென்று பரிசுப் பொருட்களை வழங்கியபோது, சிந்துஜாவின் வீட்டிற்கு மட்டும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து சிந்துஜா கேட்டபோது, திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் அவரை ஆபாசமாகப் பேசித் தாக்கியதாகத் தெரிகிறது.
இந்த அவமானத்தால் மனமுடைந்த சிந்துஜா தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மரணத்திற்கு காரணமான திமுக வேட்பாளர் கதிரவனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிந்துஜாவின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவரது உடலை வாங்க மறுப்புத் தெரிவித்து, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.





