திமுக – காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் கடும் வெறுப்பு: தமிழகத்தில் என்.டி.ஏ ஆட்சி அமையும் – பியூஷ் கோயல் அதிரடி!
சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் இருப்பதாக மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் ஊழல் மலிந்த மற்றும் தமிழுக்கு எதிரான போக்கைக் கடைபிடிக்கும் ஸ்டாலின் மற்றும் உதயநிதி தலைமையிலான திமுக அரசு விரைவில் முடிவுக்கு வரும் என்று விமர்சித்தார். “தீய சக்தியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிரான எங்களது அரசியல் போரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டோம்” என்று அவர் முழங்கினார்.
மேலும், மகாராஷ்டிரா, ஹரியானா, பீகார் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிகளை மக்கள் ஏற்கனவே முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டதைச் சுட்டிக்காட்டிய பியூஷ் கோயல், அதே நிலைதான் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்றார். தமிழக மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புவதாகவும், மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி அமைப்பதற்கு மக்கள் முழுமையாகத் தயாராகிவிட்டனர் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.








