தமிழகத்தில் ஜூலை 17 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஜூலை 17-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நடைபெறும் எனத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுவாக நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு, கடைசியாக 2011-ம் ஆண்டு நடைபெற்றது. 2021-ம் ஆண்டு நடைபெற வேண்டிய கணக்கெடுப்பு பணிகள், கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் இரு கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, தமிழகத்தில் முதற்கட்டமாகத் தொடங்கவுள்ள இந்த 45 நாள் பணியில், வீடுகளின் நிலை, சொத்துக்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த 33 முக்கியக் கேள்விகள் மக்களிடம் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த மிக முக்கியமான கணக்கெடுப்புப் பணியின் மூலம், அரசின் நலத்திட்டங்களை முறையாகத் திட்டமிடத் தேவையான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.