30 ஆண்டுகளாக போராட்டம்: தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராம மக்கள், தங்களை திருவள்ளூர் மாவட்டத்துடன் இணைக்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட இந்த இரண்டு கிராமங்களில், ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1997-ஆம் ஆண்டு மாவட்டப் பிரிவினையின் போது ஏற்பட்ட நிர்வாகக் குழப்பத்தால், ஒரே ஊராட்சி இரண்டு மாவட்டங்களின் கட்டுப்பாட்டில் சிக்கியது. இதன் காரணமாக, கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டு தமிழக அரசு, பழஞ்சூர் மற்றும் பாப்பான்சத்திரம் கிராமங்களை முழுமையாக திருவள்ளூர் மாவட்டத்துடன் இணைக்க உத்தரவிட்டது.
எனினும், அரசாணை வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தும், வருவாய்த் துறை பதிவேடுகளில் இக்கிராமங்களின் பெயர்கள் இதுவரை இடம்பெறவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பூந்தமல்லி வருவாய்த் துறை பதிவேட்டிலும் இந்த கிராமங்கள் இடம்பெறாமல், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மேவளூர்குப்பம் என்ற பெயரிலேயே தொடர்வதாக கூறப்படுகிறது.
இந்த நிர்வாகக் குளறுபடிகளை கண்டித்து, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குமணன்சாவடி பேருந்து நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாணையை உடனடியாக அமல்படுத்தாவிட்டால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.