தவெகவுடன் கூட்டணி உறுதி? – காங்கிரஸ் சர்வேயால் ராகுல் மகிழ்ச்சி; ச.மூ. பவனில் பிரியாணி விருந்து
தவெகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக வெளியான தகவலால், தவெக தலைவர் விஜய் ஆதரவு காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலின் அறிவிப்பால் அதிருப்தியடைந்த ராகுல்
காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், பொதுமேடையில் “ஆட்சியில் பங்கு தர முடியாது” என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததை, ராகுல் காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இது தனக்கு அவமதிப்பாக இருந்ததாக அவர் கருதுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், காங்கிரசுக்கு சாதகமான 125 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வார் ரூம் நிர்வாகிகள் தயாரித்திருந்த நிலையில், அதிலிருந்து 70 தொகுதிகளைத் தேர்வு செய்யுமாறு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வேணுகோபால் – விஜய் சந்திப்பு?
தொகுதி பட்டியலை தவெகவிடம் வழங்கி, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தும் பொறுப்பு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.
வேணுகோபால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வரும் 17ஆம் தேதி சென்னை வரவுள்ள வேணுகோபால், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெயர் மாற்றத்தை கண்டித்து நடைபெறும் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்கிறார். அப்போது, தவெக தலைவர் விஜயை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சத்தியமூர்த்தி பவனில் பிரியாணி விருந்து
தவெகவுடன் கூட்டணி அமையும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் பிரபல அசைவ ஹோட்டலில் இருந்து மட்டன் பிரியாணி வரவழைத்து, தடபுடலாக விருந்து கொண்டாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, வேணுகோபால் தலைமையில் நடைபெறவுள்ள பேரணியை வெற்றிகரமாக நடத்தும் வகையில், இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.