சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு: மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை ரத்து
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடைத்தாள்களை கைகளால் திருத்துவதற்குப் பதிலாக, கணினி மூலம் டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்யப்படுவதால், திருத்தத்தில் ஏற்படும் பிழைகள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விடைத்தாள்களை முழுமையாக டிஜிட்டல் முறையில் திருத்தும் நடைமுறைக்கு சிபிஎஸ்இ மாறி வருவதன் காரணமாக, இந்த ஆண்டு முதல் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பிறகு மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை கைவிடப்பட உள்ளதாக அவர் கூறினார்.
அதே நேரத்தில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் தொடர்ந்து கைகளால் திருத்தப்படும் முறையிலேயே மதிப்பிடப்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்த புதிய நடைமுறை மூலம் தேர்வு முடிவுகளில் வெளிப்படைத்தன்மையும் துல்லியமும் அதிகரிக்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.