கும்பகோணம் அருகே பழமையான ஐம்பொன் சிலைகள் பறிமுதல் – 4 பேர் கைது
கும்பகோணம் அருகே இரு பழமையான ஐம்பொன் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்த முயன்றதாகக் கூறப்படும் நால்வரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள வளையப்பேட்டை பகுதியில், கடந்த 6ஆம் தேதி சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த காரை போலீசார் சோதனை செய்தனர். சோதனையின் போது, வாகனத்தில் இருந்த மூட்டையில் சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, காரிலிருந்து இரண்டு பழமையான ஐம்பொன் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக காரில் பயணம் செய்த மணிகண்டன், ராமச்சந்திரன் உள்ளிட்ட நால்வரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.