காலை உணவு திட்டம்: தரம் குறைவு குற்றச்சாட்டு – தஞ்சையில் தூய்மைப் பணியாளர்கள் புறக்கணிப்பு
தஞ்சை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக குற்றம்சாட்டி, தூய்மைப் பணியாளர்கள் அதனை புறக்கணித்தனர். மேலும், அதற்குப் பதிலாக அரசு நிர்ணயித்துள்ள ₹761 தொகையை முழு ஊதியமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
நகராட்சி மற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் காலை உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பணிக்கு வருகிற பணியாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் இந்தத் திட்டம் தஞ்சை மாநகராட்சியிலும் நடைமுறையில் உள்ளது. அங்கு ஒப்பந்ததாரர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வழங்கப்படும் உணவு தரமற்ற நிலையில் இருப்பதாகவும், அதை உட்கொண்டால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பணியாளர்கள் கவலை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் உணவை ஏற்க மறுத்தனர்.
மேலும், உணவுக்கான செலவாக அரசு நிர்ணயித்துள்ள ₹761 தொகையை நேரடியாக ஊதியமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கைக்கு அதிகாரிகள் எவ்வாறு பதிலளிக்கிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.