“ஸ்டிக்கர் அரசியல் தொடர்கிறது” – அண்ணாமலை குற்றச்சாட்டு
மத்திய அரசின் திட்டங்களுக்கு தங்களது பெயரைச் சேர்த்து விளம்பரம் செய்வது திமுக அரசின் வழக்கமான நடைமுறை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 2022–23 நிதியாண்டு தொடங்கிய ஏப்ரல் 1, 2022 அன்று மத்திய அரசு அறிமுகப்படுத்திய பணிபுரியும் மகளிருக்கான “சக்தி நிவாஸ்” திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியின் அடிப்படையில், 2023 ஜூலை 13 அன்று “தோழி விடுதி” தொடங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ₹223 கோடி ஒதுக்கீடு செய்ததுடன், அதில் ₹147.18 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை நிலை இப்படியிருக்க, “தோழி விடுதியை முன்வைத்து மத்திய அரசு புதிய திட்டம் அறிவித்துள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது தவறான தகவல் என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாநில அரசு தங்களது முயற்சியாக காட்ட முயற்சிப்பதாகவும், இது “ஸ்டிக்கர் ஒட்டும் அரசியல்” எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
விளம்பர நடவடிக்கைகளுக்கு செலவிடப்படும் நிதியை, மக்கள் நலத் திட்டங்களை உருவாக்க பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அண்ணாமலை தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.