நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜக சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கம்
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை திறம்பட ஒருங்கிணைக்க தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மாநில அளவிலான தேர்தல் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் இலக்குடன், கட்சித் தலைவர்களும் பணியாளர்களும் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த முக்கியமான தேர்தலில், முந்தைய அனுபவங்களைப் போலச் சிறப்பாக தேர்தல் நடவடிக்கைகளை வழிநடத்தும் நோக்கில், தனது தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இணை ஒருங்கிணைப்பாளர்களாக எஸ்.ஆர். சேகர், ஆர்.என். ஜெயப்பிரகாஷ், மா. வெங்கடேசன், மாலா செல்வக்குமார் மற்றும் ராமப்பிரியன் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.