ராமநாதபுரத்தில் தேர்தல் முன்னிட்டு திமுக தரப்பில் இலவச பொருட்கள் வழங்கப்படுவதாக புகார்
ராமநாதபுரம் பகுதியில் தேர்தலை மனதில் வைத்து திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வரவிருக்கும் தேர்தலைக் குறிவைத்து, வாக்காளர்களின் ஆதரவை பெறும் நோக்கில் திமுக நிர்வாகிகள் தமிழகத்தின் பல இடங்களில் பல்வேறு வகையான பொருட்களை விநியோகித்து வருவதாக புகார்கள் தெரிவிக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நினைவாக வழங்கப்படுவதாகக் கூறி, குடும்ப அட்டைகளை அடிப்படையாகக் கொண்டு பொருட்கள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அந்தப் பரிசுப் பொருட்களில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.