சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் மணிப்பூர் சார்ந்த இந்திய குடியரசுக் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் வழங்கல்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள மணிப்பூரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய குடியரசுக் கட்சிக்கு, ‘கரும்பு விவசாயி’ என்ற தேர்தல் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வரை ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. ஆனால், அதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அந்தச் சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்படவில்லை.
“முதலில் விண்ணப்பிக்கும் கட்சிக்கே முன்னுரிமை” என்ற விதிமுறையின் அடிப்படையில், ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, மக்களவைத் தேர்தலில் ‘மைக்’ சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.19 சதவீத வாக்குகளை பெற்றதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.
இந்த சூழலில், 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் நாம் தமிழர் கட்சி பயன்படுத்தி வந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் தற்போது இந்திய குடியரசுக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மணிப்பூரைச் சேர்ந்த இந்தக் கட்சி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் நேரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள ‘கலப்பை விவசாயி’ சின்னமும், ‘கரும்பு விவசாயி’ சின்னமும் அருகருகே இடம்பெறும் சூழல் ஏற்பட்டால், வாக்காளர்களுக்கு குழப்பம் உருவாக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.