தமிழகத்தின் 48 பகுதிகளில் ‘நமோ’ மாரத்தான் – நயினார் பாலாஜி அறிவிப்பு
கிராமப்புறங்களில் இருந்து உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில், தமிழகமெங்கும் 48 இடங்களில் ‘நமோ மாரத்தான்’ போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவர் நயினார் பாலாஜி தெரிவித்துள்ளார்.
நமோ யூத் பவுண்டேஷன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு பிரிவு இணைந்து சேலத்தில் இன்று மாரத்தான் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நயினார் பாலாஜி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 48 இடங்களில் நமோ மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் மறைந்திருக்கும் விளையாட்டு திறமைகளை கண்டறிந்து வளர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய இலக்கு என்றும், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் இளைஞர்களை உருவாக்குவதற்கான தொடக்க முயற்சி இது என்றும் அவர் கூறினார்.