வட இந்தியர்களை குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசிய கருத்து – அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு
வட மாநில மக்களின் வேலைவாய்ப்பை குறித்து சர்ச்சை எழும்பும் வகையில் பேசிய தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் உரைக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பானிபூரி வியாபாரம், கட்டடத் தொழில், உணவகங்களில் மேசை சுத்தம் செய்வது போன்ற பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பேச்சு, வட மாநிலத்தவர்களின் தொழில் தொடர்பாக அவமதிக்கும் விதமாக இருந்ததாக கூறி பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாஜக எம்பி முரளிதர் மொஹோல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த குடிமக்கள் வடக்கிலும் தெற்கிலும் வேலை செய்து வருவதே நிதர்சனமான உண்மை என தெரிவித்துள்ளார். திமுக அமைச்சரின் இந்த பேச்சு தற்செயலாக வந்தது அல்ல என்றும், வட இந்தியர்களை இழிவுபடுத்தும் பேச்சுகள் திமுக அமைச்சர்களிடமிருந்து தொடர்ந்து வெளிப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இவ்வகையான கருத்துகள் மிகவும் பொறுப்பற்றதும், அபாயகரமானதுமானதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசத்தின் ஒருமைப்பாட்டை விட கூட்டணி அரசியல் முக்கியமா என இண்டி கூட்டணித் தலைவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ள பாஜக எம்பி, இந்திய மக்களை பிளவுபடுத்துவதுதான் இண்டி கூட்டணியின் சமூக நீதி நோக்கமா எனவும் விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ், திமுக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் கருத்துகளை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். கல்வி, தொழில்நுட்பம், தொழில்துறை மற்றும் சேவைப் பிரிவுகளில் தென் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டாலும், அமைச்சரின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் கூறியுள்ளார்.