சொத்து தகராறு பேச்சுவார்த்தை என அழைத்து உறவினரை கொன்ற தொழிலதிபர் கைது
திருப்பூரில் நிலுவையில் இருந்த சொத்து பிரச்னையை பேசித் தீர்க்கும் பெயரில் உறவினரை ஓட்டலுக்கு வரவழைத்து கொலை செய்த சம்பவத்தில், தொழிலதிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அமரன், திருப்பூர் பங்களா ஸ்டாப் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். பின்னர், பல்லடம் பகுதியில் பனியன் வியாபாரம் செய்து வரும் தனது உறவினர் செந்தில்நாதனை பேச்சுவார்த்தைக்காக அந்த அறைக்கு அழைத்துள்ளார்.
அங்கு இருவருக்கிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் தகராறாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த அமரன், முன்பே வைத்திருந்த ஆயுதத்தை பயன்படுத்தி செந்தில்நாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஓட்டல் நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் அளித்தது. தகவலின் பேரில் விரைந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், தொழிலதிபர் அமரனை கைது செய்தனர்.
மேற்கொண்ட விசாரணையில், இருவருக்கிடையே நீண்ட காலமாக சொத்து தொடர்பான மோதல் இருந்து வந்ததும், அதனைத் தீர்ப்பதாகக் கூறி அழைத்துச் சென்று இந்த கொலை நடந்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.