உலகத் தரத்திற்கு உயர்த்தப்படும் தமிழக ரயில்வே – தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்
தமிழகத்தில் அமைந்துள்ள 77 ரயில் நிலையங்கள், ‘அம்ரித் பாரத்’ ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், உலகத் தரத்தில் மறுசீரமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் சுமார் 1,350 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய ரயில்வே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த அளவு, முழு இலங்கை நாட்டின் ரயில்வே தண்டவாள நீளத்திற்கு சமமானது என்றும் அவர் விளக்கினார்.
மேலும், 2014 முதல் தமிழகத்தில் 2,386 கிலோமீட்டர் நீளத்திற்கு ரயில்வே பாதைகள் மின் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், இது மொத்த ரயில்வே வலையமைப்பில் 97 சதவீதம் ஆகும் என்றும் தெரிவித்தார். இந்த ஆண்டில் ரயில்வே துறையில் பல புதிய கட்டுமானப் பணிகளும், தொழில்நுட்ப புதுமைகளும் அமல்படுத்தப்பட உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயணிகளுக்கு எந்தவிதமான சிறிய தொந்தரவுகளும் ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், தமிழக ரயில்வேயின் அடையாளம் இனி சர்வதேச தரத்தில் மாற்றம் பெறும் என்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார்.