மதுரை கீழக்கரையில் ஜல்லிக்கட்டு உற்சாகம் – வாடிவாசலில் சீறிய காளைகள்
மதுரை கீழக்கரை பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, பார்வையாளர்களின் பெரும் வரவேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரை அடுத்துள்ள கீழக்கரை கிராமத்தின் ஏறுதழுவுதல் மைதானத்தில் நடந்த இந்த பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை, அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த போட்டியில் சுமார் 1,200 காளைகள் மற்றும் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வாடிவாசல் வழியாக வேகமாக வெளியேறிய காளைகளை, வீரர்கள் தைரியத்துடனும் திறமையுடனும் அடக்கி பார்வையாளர்களின் கைத்தட்டலை பெற்றனர்.
போட்டியில் சிறப்பாக செயல்பட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள்கள், பெரிய பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்திய இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வை, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.