அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய இந்திய வம்சாவளி ஆஷ்லே டெல்லிஸ் கைது: சீன அதிகாரிகளை சந்தித்தது அம்பலம்

அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வைத்திருந்தது மற்றும் சீன அதிகாரிகளை சந்தித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

64 வயதான ஆஷ்லே டெல்லிஸ் மும்பையில் பிறந்தவர். இந்திய வம்சாவளியான அவர் அமெரிக்க ஆய்வாளர் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆலோசகராக உள்ளார். 2001-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துவரும் ஆஷ்லே டெல்லிஸ், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பதவிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க விமானப் படை தொடர்பான ரகசிய ஆவணங்களை பதுக்கியது மற்றும் சீன அரசு அதிகாரிகளை ஓட்டலில் சந்தித்து பேசியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் எஃப்பிஐ அதிகாரிகள் ஆஷ்லே டெல்லிஸை நேற்று கைது செய்தனர். இதற்கு முன் வெர்ஜினியாவில் உள்ள அவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் 1,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ ரகசிய ஆவணங்கள் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

அமெரிக்க பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அலுவலகங்களில் இருந்த ரகசிய ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றுள்ளார் என்று எஃப்பிஐ சிறப்பு ஏஜென்ட் ஜெப்ரி ஸ்காட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், 2002-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2025-ம் ஆண்டு செப்டம்பர் வரை வெர்ஜினியாவில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் ஆஷ்லே டெல்லிஸ் சீன அதிகாரிகளை சந்தித்து பேசியதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆஷ்லே டெல்லிஸுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

Facebook Comments Box