சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வரவேற்கிறோம்: முதல்வரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி

“சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வரவேற்கிறோம். அதற்காக முதல்வருக்கு நன்றி கூறினோம். இனி வரும் காலங்களில் எந்தப் பெயரும் சாதி அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு” என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கடந்த காலங்களில் சில தலைவர்களின் பெயர்கள் சாதிப் பெயர்களுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே அவர்கள் கொண்டிருந்த அடையாளத்தை பின்பற்றுவது மூலம் சாதியை வளர்க்க முடியாது.

கோவையில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை ‘ஜி.டி பாலம்’ என்று பெயரிடுவது புதிய தலைமுறைக்கு மகிழ்ச்சி தரும். ஆனால் ‘ஜி.டி. நாயுடு பாலம்’ என்ற பெயரில் அவரை அடையாளப்படுத்த அரசு முடிவு எடுத்திருப்பதால், அது சாதியை வளர்ப்பதற்கானதாக இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.

இனிவரும் காலங்களில் எந்தப் பெயரும் சாதி அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு. மேலும் சில சாதிப் பெயர்களில் உள்ள “ன்” என்ற விகுதியை “ர்” விகுதியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வெளியிட்டதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம்.

நியமன தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். வட சென்னை பகுதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். காசா தொடர்பான தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வருவதை நாங்கள் வரவேற்கிறோம்.

ஒரு சில கோரிக்கைகள் குறித்து மட்டுமே இன்று முதல்வரிடம் பேசினோம். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து இனிவரும் நாட்களில் எங்கள் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் குரல் கொடுப்பார்கள். தனியார் மயத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம்” என திருமாவளவன் தெரிவித்தார்.

Facebook Comments Box