“நீதி வென்றே தீரும்” – உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் விஜய் பதிவு!
கரூர் நெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கான உத்தரவை வெளியிட்டுள்ள நிலையில், அதை நேரடியாக குறிப்பிடாமல், “நீதி வெல்லும்” என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்; மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து மாநில அரசு அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. அதே சமயம், சென்னை உயர் நீதிமன்றம் அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வாதங்களை கேட்ட பிறகு இன்று தீர்ப்பு வழங்கியது. அதன் படி, ஓய்வு பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதில், விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் “நீதி வெல்லும்” என்று சுருக்கமான ஆனால் அர்த்தமுள்ள பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, கரூர் நெரிசல் சம்பவம் நடந்த இரவே, இரவு 11.15 மணியளவில் இரங்கல் தெரிவித்து விஜய் ட்வீட் செய்திருந்தார். அடுத்த நாள் (செப்டம்பர் 28) நிதியுதவி அறிவிப்பை வெளியிட்டார். மேலும், செப்டம்பர் 30 அன்று வெளியிட்ட வீடியோவில், கரூர் நிகழ்வில் சதி இருப்பதாகவும், தமது தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமெனவும் முதல்வரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
இப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில், அவர் மீண்டும் “நீதி வெல்லும்” என பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தவெகவை திமுக முடக்க முயற்சிக்கிறது; ஆனால் கரூர் சம்பவத்தின் உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.