தமிழகத்தில் நாளை முதல் அக்.19 வரை கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் பல மாவட்டங்களில் நாளை (அக்.14) முதல் அக்.19 வரை, ஆறு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள் மீது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல் கடலோர ஆந்திரா மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் இதே நிலை தொடர்கிறது. இதன் விளைவாக, தமிழகத்தில் அக்.14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சில இடங்களில், அக்.16 முதல் 19 வரை பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக்.14 அன்று கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக்.15 அன்று திருநெல்வேலி மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யலாம்.

அக்.16 அன்று கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக்.17 அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யலாம்.

அக்.18 அன்று கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக்.19 அன்று கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு அணைக்கட்டில் பதிவாகியுள்ளது (8 செ.மீ). இதே அளவு மழை புதுக்கோட்டை ஆயிங்குடி, தென்காசி மற்றும் வேலூர் மாவட்டம் அம்முண்டியிலும் பெய்துள்ளது. வாலாஜா, நாங்குனேரி, விரிஞ்சிபுரம் ஆகிய இடங்களில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வேலூர், கடலூர், ஆற்காடு, தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box