‘18 எம்எல்ஏக்களை அரசியல் அநாதையாக்கியவர் டிடிவி தினகரன்’ – ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சமயநல்லூரில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரத்தில் கலந்து கொண்ட சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார், டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறியதாவது:
“தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் திமுகவின் துரோகங்களை வெளிக்கொணரும் வகையில் சக்கர வடிவில் பிரசுரங்கள் அச்சிட்டு, திண்ணைப் பிரச்சாரத்தின் மூலம் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது.
ஒருவர் திமுகவையும் ஸ்டாலினையும் பாராட்டி பேசும் தருணத்திலேயே அவர் அதிமுக பற்றி பேசும் தகுதியை இழந்து விடுகிறார் என்பது நிதர்சனமான உண்மை. இதுவே தொண்டர்களின் தீர்ப்பு.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் யார் முதல்வராக வரவேண்டும் என்று தீர்மானிப்பது மக்கள்தான்; மக்களின் நம்பிக்கையையும் தொண்டர்களின் நம்பிக்கையையும் இழந்த ஒருவரின் தனிப்பட்ட கருத்தை யாரும் பொருட்படுத்த தேவையில்லை.
எங்கள் தொண்டர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காட்டிய பாதையில் உறுதியாக நடந்து வருகின்றனர். திமுகவின் குடும்ப வாரிசு ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, மீண்டும் ஜனநாயகத்தை மலரச்செய்வதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையே அரணாக விளங்குகிறார்.
ஆனால் இன்றோ சிலர் தங்கள் சுயநலத்திற்காக மக்கள் நலனையும் தொண்டர் நலனையும் மறந்து கருத்துக் கந்தசாமியாக (டிடிவி தினகரன்) மாறியுள்ளனர். தமிழகத்தில் யார் முதல்வராக வரவேண்டும் என தீர்மானிப்பது மக்கள்தான்; தனிநபர்களின் விருப்பமல்ல.
வரலாறு சொல்லும் உண்மை என்னவென்றால் — மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் கருத்துக்கு அரசியலில் இடமில்லை. 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை மலரச் செய்வார்.
நமது எதிர்கால அரசியல் பாதையை யாரும் தீர்மானிக்க முடியாது. உங்களை நம்பியவர்கள் விலகி விட்டனர்; இன்னும் புரியாதவர்கள் விரைவில் விலகுவார்கள். உங்களை நம்பிய 18 சட்டமன்ற உறுப்பினர்களை அரசியல் அநாதையாக்கியவர் நீங்களே.
உங்களது தளபதிகள் இன்று ஸ்டாலினுக்கு தளபதிகளாகி விட்டனர். முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தங்கத்தமிழ் செல்வன் ஆகியோர் உங்கள் துரோகத்தால் திமுகவுக்கு சென்றனர். மகேந்திரன், உமாதேவன் உள்ளிட்ட பலரும் இன்று எடப்பாடியாரின் தலைமையை ஏற்றுள்ளனர்.
அம்மாவின் கொடியை கையில் வைத்துக் கொண்டு திமுகவைக் பாராட்டுவது பச்சை துரோகம். இதற்கெல்லாம் டிடிவி தினகரனே பதில் சொல்ல வேண்டும்.”
இவ்வாறு ஆர்.பி. உதயகுமார் உரையாற்றினார்.