முதல்வர் அறை புதுப்பிப்பு பணிகளின் உண்மைக் காரணத்தையும் டெண்டர் விவரங்களையும் வெளியிட வேண்டும்: நயினார்
முதல்வரின் அறையை புதுப்பிக்கும் பணிகள் தொடர்பாக தமிழக அரசு வெளிப்படையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். டெண்டர் நடைமுறைகள் நிறைவடையாத நிலையில் பணிகள் எவ்வாறு தொடங்கப்பட்டன என்றும், இதற்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அலுவலர்களின் வசதிக்காக பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டாலும், டெண்டர் முடிவடையாத நிலையில் பணிகளை தொடங்குவது எப்படி சாத்தியம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு பணியை வழங்க முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டுவிட்டதா என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் அலுவலகத்தை மாற்றுவதற்கான டெண்டர் குறித்து சட்டப்பேரவையில் எழுந்த கேள்விகளுக்கு, டெண்டர் இன்னும் முடியவில்லை என்றும், பணிகள் அரசு அதிகாரிகளின் வசதிக்காக மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதேநிலையில், டெண்டர் நிறைவடையாதபோது புதுப்பிப்பு பணிகள் தொடங்கப்பட்டதற்கான அடிப்படை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இதற்கு முன்பும் டெண்டர் நடைமுறைகள் முடிவடையாமல் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதை அரசு விளக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். செய்தித்தாள் விளம்பரத்தில் பணிக்கான மதிப்பு ரூ.5.54 கோடி என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் டெண்டரில் தொகை குறிப்பிடப்படாமல் ‘என்ஏ’ என பதிவிடப்பட்டிருப்பது ஏன் என்றும், இதன் மூலம் பிற ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதை தடுக்கும் முயற்சி நடைபெற்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை தொடர்புபடுத்துவது குறித்தும் நயினார் நாகேந்திரன் விமர்சனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா முழுமையான தலைமைச் செயலகத்தையே வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கருதியதாகவும், தனிப்பட்ட அலுவலகத்தை மட்டும் நவீனப்படுத்த வேண்டும் என அவர் எண்ணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து அமைச்சர்களுக்கும் செயலாளர்கள் இருக்கும் நிலையில், அவர்களை ஓரம்கட்டி முதல்வருக்கு மட்டும் சொகுசான அறையை உருவாக்குவது ஆடம்பரமாக கருதப்படாதா என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, முதல்வரின் அறையை ஆடம்பரமாக்குவதற்கான உண்மையான காரணம் என்ன என்பதையும், அதற்கான டெண்டர் நடைமுறைகளில் முறைகேடுகள் அல்லது ஊழல் நடைபெற்றிருந்தால் அதற்கான ஆதாரங்களையும் அரசு மக்கள் முன் வெளிப்படையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.



