வறுமையின் கொடூர முகம் : 7 வயது மகள் பலி – தாய் தற்கொலை முயற்சி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, கடும் குடும்ப வறுமையால் மனமுடைந்த தாய் ஒருவர், தனது 7 வயது மகளுக்கு அரளி விதையை அரைத்துக் கொடுத்து உயிரிழக்கச் செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி போஸ்டல் காலனியைச் சேர்ந்த முனீஸ்வரி என்பவர், கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவரது கணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த அவர், போதிய வருமானமின்றி கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவ தினத்தன்று மூத்த மகள் பள்ளிக்குச் சென்றிருந்த நேரத்தில், தனது இளைய மகள் சபரிஷாவுக்கு அரளிக்காயை அரைத்து குடிக்கவைத்த முனீஸ்வரி, பின்னர் தானும் அதையே உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிய வந்துள்ளது.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகள், தாய் மற்றும் தங்கை இருவரும் மயங்கிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி 7 வயது சிறுமி சபரிஷா உயிரிழந்தார். தாய் முனீஸ்வரி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், முனீஸ்வரி மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வறுமை காரணமாக நிகழ்ந்த இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.