கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் டிஜிபிக்கு நவம்பர் 24-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் டிசம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீப விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால், நெரிசல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில் கோரப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கைகள்:
- கூட்டத்தை கட்டுப்படுத்த மற்றும் ஒழுங்குபடுத்த போதுமான காவல்துறையினரை பணியில் அமர்த்த வேண்டும்.
- கண்காணிப்பு கேமராக்களை நிறுவி கூட்டத்தின் இயக்கத்தை கண்காணிக்க வேண்டும்.
- வாகன போக்குவரத்தை முறைப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
- வாகனங்கள் நிறுத்தும் இடங்களுக்கான போதுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
- மருத்துவ சேவைகளுக்காக தற்காலிக முகாம்கள் அமைக்க வேண்டும்.
- கிரிவலப் பாதையில் போலி சாமியார்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அனுமதிக்கப்படக்கூடாது; கடைகள் அமைக்கவும் கூடாது.
நீதிபதி பி.பி. பாலாஜி இந்த வழக்கை விசாரித்து, தமிழக அரசு, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினருக்கு நவம்பர் 24-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைக்க உத்தரவிட்டார்.