பிகாரில் வாக்குத் திருட்டு குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை அங்குள்ள மக்கள் ஏற்கவில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“பிகாரில் வரலாறு காணாத வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது. இதை ஜீரணிக்க முடியாததால், தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கிறார். ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை பிகார் மக்கள் நிராகரித்து விட்டார்கள். அவர் பிரச்சாரம் செய்த இடங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது.”
மேலும் அவர் கூறியதாவது:
“2026-ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றியைப் பெற்றதும், மக்களின் மனநிலை பிரதமர் மோடியை நோக்கி மாறிவிட்டதை ஸ்டாலின் உணருவார். புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர், கூட்டணி கட்சிகளுக்கு இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசாங்கம் பாஜகவுடன் இணைந்து பல நல்ல செயல்களை செய்துள்ளது.”
அண்ணாமலை தொடர்ந்தார்:
“பிகார், புதுச்சேரியில் ‘இரட்டை இன்ஜின் அரசு’ வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்துக்கும் அதேபோன்று ‘இரட்டை இன்ஜின்’ அரசு தேவை. 2026 தேர்தலில் தமிழகம், புதுச்சேரி முழுவதும் தேஜகூ மாபெரும் வெற்றி பெறும். காங்கிரஸ் பல முறை உடைந்து, சிறிய கட்சியாக மாறிவிட்டது; ஆனால் மக்களின் ஆதரவால் பாஜக மிகப் பெரிய கட்சியாக உயர்ந்துள்ளது.”
“வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு முன்வைத்தவர்கள் அனைவருக்கும் பிகாரில் ‘ஃபெயில் மார்க்’ கிடைத்துள்ளது. அதே நிலைதான் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகளுக்கும் ஏற்படும். தவெக தலைவர் விஜய் எதிர்ப்பு அரசியலை மட்டும் முன்னிறுத்துகிறார்; மக்கள் அதைப் பார்த்து வாக்களிப்பதில்லை. மக்கள் நமக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் ஆர்வம் காண்பார்கள். புதிதாக கட்சி தொடங்கினாலே வெற்றி கிடைக்காது,” என்று அண்ணாமலை கூறினார்.