சென்னை ரயில்வே கோட்டம், ‘ரயில் மதத்’ செயலியுடன் இணைந்து, ரயில்வே உணவகங்களில் குறைகளை தெரிவிக்க க்யூஆர் கோடு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், பயணிகள் உணவகங்கள் தொடர்பான கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யலாம்.
பயணிகள் உணவகங்களில் அதிக கட்டணம், சேவை குறைபாடு, உணவின் தரம் மற்றும் அளவு, தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காதது, சுகாதார நிலை போன்ற விவரங்களைச் சேகரித்து பதிவேற்ற முடியும்.
பயணிகள் ரயில் நிலைய உணவகங்களில் உள்ள க்யூஆர் கோட்டை தங்களது செல்போனில் ஸ்கேன் செய்ய வேண்டும். அதில், உணவகத்தின் இருப்பிடம், நிலையக் குறியீடு போன்ற விவரங்கள் இருக்கும். அதை உறுதிசெய்து, ‘ரயில் மதத்’ செயலியில் செல்போன் எண்ணை பதிவேற்றிக், புகாரை அனுப்பலாம். பிறகு, குறிப்பு எண்ணுடன் ஒரு ஒப்புகைச் சீட்டு ரயில் செயலியில் கிடைக்கும்.
அனுப்பப்பட்ட புகார்களை உடனுக்குடன் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.