ஆர்டிஇ மாணவர் விவரங்கள் சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகள் தங்களின் மொத்த மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இடங்களை பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இதற்கமைய, இந்த மாணவர்களின் சேர்க்கை விவரங்களை அக்டோபர் 17-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர்கள், “முந்தைய ஆண்டுகளைப் போல இவ்வாண்டு 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிடவில்லை. சில பள்ளிகள் இடங்களை ஒதுக்கி வைத்திருந்தாலும், சில பள்ளிகளில் எல்லா இடங்களும் நிரம்பியுள்ளன” எனக் குறிப்பிட்டனர்.
மேலும், இரண்டாம் பருவம் தொடங்கிய பிறகே அரசு இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் கூறினர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜராகிய கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “மத்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம் செய்ததால், 25 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் தாமதமாகியுள்ளது. தற்போது தமிழகத்தில் 7,717 பள்ளிகளில் 81,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்றுள்ளனர். அவர்களின் கல்விக் கட்டணத்தை வழங்குவதற்காகவே மாணவர்களின் பட்டியல் கோரப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்தார்.
மேலும், சங்கத்தின் சார்பில் அல்லாது தனிப்பட்ட பள்ளிகள் மட்டுமே வழக்கு தொடர முடியும் என்றும் கூறினார்.
இதனை பரிசீலித்த நீதிபதி, “இந்த சுற்றறிக்கை கல்விக் கட்டணத்தை திருப்பி வழங்குவதற்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு, மாணவர் விவரங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடுவை அக்டோபர் 17-ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டித்தார்.
அதேசமயம், புதிய மாணவர் சேர்க்கை மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்தார்.