தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
தமிழகத்தில் நாளை (நவம்பர் 11) முதல் மூன்று நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகத்தின் உள்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், நவம்பர் 11 முதல் 13 வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 11 அன்று திருநெல்வேலி மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்; நவம்பர் 12 அன்று திருநெல்வேலி மலைப்பகுதி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில்; நவம்பர் 13 அன்று கோவை, நீலகிரி, திருநெல்வேலி மலைப்பகுதி மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், முள்ளங்கினாவிளை, அடையாமடை, பாம்பன் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழையும், பெரியகுளம் மற்றும் சிற்றாறு உள்ளிட்ட பகுதிகளில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.