மூத்த குடிமக்களின் நலனுக்காக ‘அன்புச்சோலை’ திட்டம்: திருச்சியில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
முதல்வர் மு.க. ஸ்டாலின், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘அன்புச்சோலை’ திட்டத்தை இன்று திருச்சியில் தொடங்கி வைக்க உள்ளார்.
இன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பங்கேற்கிறார். அந்த நிகழ்வில், ரூ.767 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் திமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் பல நலத்திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதில் புதிய சேர்க்கையாக, வீடுகளில் உள்ள முதியோர் மனச்சோர்வு அடையாமல் உற்சாகமாகவும் சமூகமாகவும் இருப்பதற்காக ‘அன்புச்சோலை’ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இன்று மதியம் 12.30 மணிக்கு திருச்சியில் நடைபெறும் அரசு விழாவில் இந்த புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 25 இடங்களில் ‘அன்புச்சோலை’ மையங்கள்:
இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் ‘அன்புச்சோலை – முதியோர் மனமகிழ் வள மையங்கள்’ மூத்த குடிமக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சமூக மையங்களாக செயல்படும்.
முதல் கட்டமாக, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா 2 மையங்கள் மற்றும் ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, சென்னை (தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம்) ஆகிய இடங்களில் மொத்தம் 25 மையங்கள் உருவாக்கப்படுகின்றன. இதற்கான மொத்த மதிப்பு ரூ.10 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மையங்களில் யோகா, நூலகம், பொழுதுபோக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், மூத்த குடிமக்கள் இங்கே வந்து சமூக கலந்துரையாடல்களில் ஈடுபட்டு உற்சாகமாக நேரத்தை கழிக்கலாம்.
இந்த மையங்கள் பகல் நேரங்களில் மட்டும் செயல்படும் என்றும், முதியோர் எளிதில் அணுகக்கூடிய வகையில் போக்குவரத்து வசதி உள்ள இடங்களில் அமைக்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.