தமிழக காவல் துறையில் 3,665 பணியிடங்களுக்கு தேர்வு: 1.96 லட்சம் பேர் பங்கேற்பு
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 3,665 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 21 அன்று வெளியிட்ட அறிவிப்பின் படி,
- காவல் துறையில் 2,837 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள்,
- சிறைத்துறையில் 180 பணியிடங்கள்,
- தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் 631 பணியிடங்கள்,
இவற்றை நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அதைவிட உயர்ந்த கல்வித் தகுதியுடைய பொறியாளர்கள், பட்டதாரிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பித்தனர். மொத்தம் 2.5 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், 2,24,711 பேருக்கு நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
நேற்று, மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 45 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் 1,96,161 தேர்வர்கள் பங்கேற்றனர். சுமார் 28,550 பேர் தேர்வுக்கு வரவில்லை.
தேர்வர்கள் காலை 6 மணிக்கே மையங்களுக்கு வந்தனர். காலை 8 மணிக்கு கடுமையான சோதனைக்குப் பின் தேர்வு அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், ஸ்மார்ட்வாட்ச், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் கண்காணிப்பு மேற்கொண்டனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி உள்ளிட்ட 10 மையங்களில் மட்டும் 8,090 தேர்வர்கள் (இதில் 1,772 பெண்கள்) பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் ஆணையர் அருண் மேற்பார்வை செய்தார்.
மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் தேர்வு நடைபெற்று முடிந்தது. தேர்வு எளிதாக இருந்ததாக பல தேர்வர்கள் தெரிவித்தனர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவர்.