கரூர் துயரம்: தவெக பிரச்சார வாகன சிசிடிவி பதிவு, ஆவணங்கள் சிபிஐ-யிடம் ஒப்படைப்பு
கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்பாக, தவெக பிரச்சார வாகனத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் இன்று (நவம்பர் 8) சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ, இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்டோபர் 30 முதல் விசாரணை நடத்தி வருகிறது.
சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தை 3D லேசர் ஸ்கேனர் கருவி மூலம் ஆய்வு செய்ததுடன், அருகிலுள்ள கடைகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் சேகரித்தனர். மேலும், சென்னையில் உள்ள தவெக அலுவலகத்தில் இருந்து பிரச்சார வாகனத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் விவரங்களையும் கோரியிருந்தனர்.
இந்நிலையில், இன்று கரூர் சுற்றுலா மாளிகையில் தவெக வழக்கறிஞர் அரசு மற்றும் நிர்வாகிகள் மூவர், பிரச்சார வாகனத்தின் சிசிடிவி வீடியோ பதிவுகள் மற்றும் ஆவணங்களை ஒரு பையில் வைத்து சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சிபிஐ தற்போது ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. சம்பவம் குறித்த உண்மை நிலை வெளிவர, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.