அமித் ஷா ஆயிரம் தடவை தமிழகம் வந்தாலும் பாஜக வேரூன்ற இயலாது: செல்வப்பெருந்தகை கருத்து
அமித் ஷா 1000 முறை வந்தாலும் தமிழகத்தில் பாஜக வேரூன்ற முடியாது என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நெல்லையில் இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசை களைந்துவிடுவோம் என்றும், அதிமுக–பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும் அதிகாரத்துடன் பேசியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அமித் ஷா, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியின் பெயரைக்கூட குறிப்பிடவில்லை. அதிமுக தலைமையோ, உள்துறை அமைச்சரின் அழுத்தத்திற்குள் இருந்து, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சிக்கல்களில் இருந்து தப்பிக்க வாய்ப்புக்கேற்ப கூட்டணி அமைத்திருக்கிறது. இப்படிப்பட்ட சுயநலக் கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள்.
திமுக ஆட்சியில் ஊழல் அதிகம் நடந்துள்ளது என்று அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியைச் சேர்ந்த எந்த ஊழல் வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை. மாறாக, 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ரஃபேல் போர் விமான ஊழல், தேர்தல் நன்கொடை பத்திர மோசடி போன்ற பல பெரிய ஊழல்கள் நடந்துள்ளன.
வாக்குகளை திருடி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்டோரின் பொய்யான குற்றச்சாட்டுகளை தமிழக மக்கள் நம்புவதில்லை. தமிழ் மொழிக்காக அதிகம் பேசும் அமித் ஷா, அதற்காக ரூ.20 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளார். எனவே, அவரின் பேச்சை தமிழக மக்கள் ஏற்கப்போவதில்லை.
அமித் ஷா ஆயிரம் தடவை வந்தாலும் தமிழகத்தில் பாஜக வேரூன்ற இயலாது.