இந்தியப் பெருங்கடலில் 335 கிலோ போதைப் பொருள் பறிமுதல்; 6 பேர் கைது – இலங்கை கடற்படை விசாரணை
இந்தியப் பெருங்கடலை வழியாக கடத்தப்பட்ட 335 கிலோ போதைப் பொருளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இதில் தொடர்புடையதாக இலங்கையைச் சேர்ந்த 6 பேரை அவர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சர்வதேச கடற்பகுதியில் போதைப் பொருள் கடத்தல் கப்பல்கள் மற்றும் படகுகளை கண்காணித்து வரும் இலங்கை கடற்படை, சந்தேகத்திற்கிடமான ஓர் ஆழ்கடல் மீன்பிடி படகை இந்தியப் பெருங்கடலில் கண்டறிந்து திக்கோவிட்ட கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றது.
அங்கு படகைச் சோதனை செய்தபோது, 16 பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 கிலோ மெத்தம்ஃபெட்டமைன் மற்றும் 85 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. படகில் இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ₹100 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை எங்கிருந்து கடத்தப்பட்டவை, மேலும் இதில் தொடர்புடையவர்கள் யார் என்ற திசையில் இலங்கை கடற்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.