அக். 24 வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் (அக்.19) வரும் 24-ம் தேதி வரை பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று ஆழ்ந்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
அதேபோல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 21-ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகரும் போது வலுப்பெறக்கூடும்.
இதன் தாக்கமாக, இன்று முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
இன்று (அக்.19) கோவை மலைப்பகுதி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (அக்.20) செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.
மேலும், அக்.21 முதல் 24 வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் அதிகம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.