“அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளதால்…” – பழனிசாமி பேச்சு

சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக எப்போதும் அரணாக இருக்கும் என்றும், எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேரப்போகின்றன என்றும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆம்பூரில் தனது பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் இன்று மாலை பொதுமக்களிடம் பழனிசாமி பேசும்போது, “ஆம்பூர் தொகுதி தோல் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. தற்போது திமுக ஆட்சியில் பல தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதனை சரிசெய்யும். சரிந்த தோல் தொழிலை அதிமுக சரிசெய்யும்.

ஆம்பூர் தொகுதி இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. அதிமுக-பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக பொய்யான தகவலை பரப்புகிறது. தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக, சிறுபான்மையின மக்களுக்கு எப்போதும் அரணாகவே இருந்துள்ளது. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவும் சிறுபான்மையின மக்களுக்கு அரணாக இருந்ததைப் போல நாங்களும் இருப்போம். திமுகவின் பொய்யான பிரச்சாரம் இனி எங்குமே செல்வதில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் அதிமுக தான் தலைமை தாங்கும். எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளன. எனவே, சிறுபான்மையின மக்கள் அதிமுக கூட்டணியைப் பார்க்க அச்சப்பட தேவையில்லை.

அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர் மற்றும் சிறுபான்மையினருக்கு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கியது அதிமுக அரசு. சிறுபான்மையின மக்களுக்காக எப்போதும் அரணாக இருப்பது அதிமுக தான் என்பதை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

திமுக ஆட்சியில் விலை உயர்ந்து மக்கள் கஷ்டப்படுகின்றனர். பல பொய்களை மக்களுக்கு கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுகவினர். இந்த முறை அதுபோல் நடக்கவிடமாட்டோம். சென்னையில் தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல், திமுக அரசு தூய்மை பணியாளர்களை கைது செய்துள்ளது. இதற்கு திமுக கூட்டணியில் இருக்கும் தோழமை கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதிமுக மக்களுக்கான கட்சி. திமுக குடும்பத்துக்கான கட்சி அல்ல. வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என செயல்படுவோம்” என்றார். அப்போது எம்.பி. தம்பிதுரை, மாதனூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box