கருகும் நிலையில் குறுவை நெற்பயிர்கள்! தவெக அரசு விவசாயிகளின் வயிற்றில் அடித்துவிடக் கூடாது: நயினார் நாகேந்திரன் சாடல்!
“மோட்டார் பம்பு செட்டுகளுக்குத் தேவையான மும்முனை மின்சாரம் (Three-Phase Power) தடையின்றி கிடைக்காததால், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்கள் காய்ந்து சருகாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது” எனத் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆளும் தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) வலைதளப் பதிவில், “இந்த ஆண்டிற்கான குறுவை சாகுபடிப் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து இதுவரை தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதனால், கடன் வாங்கி நடவு செய்த நெற்பயிர்களைக் காப்பாற்ற டெல்டா பகுதி விவசாயிகள் தங்களது சொந்த மோட்டார் பம்ப் செட்களையே முழுமையாக நம்பியுள்ளனர்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து மாநில அரசின் மின்சார விநியோகக் குறைபாடுகளைச் சாடிய அவர், “தவெக ஆட்சியில் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால், மும்முனை மின்சாரம் சரிவரக் கிடைக்காமல் மோட்டார் பம்ப் செட்கள் அனைத்தும் முற்றிலும் முடங்கிப் போய்க் கிடக்கின்றன. இது, வளர்ந்து வரும் நெற்பயிர்களையும், உழைத்துக் களைத்த விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தையும் ஒருசேர பாழாக்கிவிடும். பொதுமக்கள் முதல் நாட்டின் முக்கியத் தொழில்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்தத் தொடர் மின்வெட்டுப் பிரச்சினையை, முதலமைச்சர் விஜய் இனியும் அலட்சியமாகக் கையாளக் கூடாது. ‘மின் உபகரணங்கள் திருடுபோய்விட்டன, புகார் கொடுத்துள்ளோம்’ என்ற உப்புச்சப்பில்லாத காரணங்களைக் கூறி கடமையைத் தட்டிக்கழிக்காமல், தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் அரசு முடுக்கிவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் விவசாயிகளுக்கான அவசரக் கோரிக்கைகளை முன்வைத்துள்ள நயினார் நாகேந்திரன், “மேட்டூர் அணையிலிருந்து இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாகப் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதுவரை, மோட்டார் பம்ப் செட்கள் மூலம் பாசனம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் உரிய டீசல்/மின்சார மானியம் வழங்க முன்வர வேண்டும். கடந்த கால தி.மு.க அரசைப் போல, தற்போதைய தவெக அரசும் விவசாயிகளின் வயிற்றில் அடித்துவிடக் கூடாது என்பதை முதலமைச்சருக்குக் கோரிக்கையாகவும், எச்சரிக்கையாகவும் முன்வைக்கிறேன்” என்று தனது அறிக்கையில் மிக அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.




