அரசு கலைக் கல்லூரிகளில் பொதுக் கலந்தாய்வு தொடக்கம்: ஜூலை 1 முதல் வகுப்புகள்!
தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான (2026-2027) இளநிலை பட்டப்படிப்பு முதற்கட்ட பொதுக் கலந்தாய்வு தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள 1.26 லட்சம் இடங்களுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பித்திருந்த நிலையில், பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் ஏற்கனவே கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வும் நிறைவடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது பொதுப் பிரிவினருக்கான சேர்க்கை இட ஒதுக்கீடு முறைப்படி நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் 18ஆம் தேதி வரை இந்த கல்லூரி அளவிலான கலந்தாய்வு நீடிக்கும் என்றும், சேர்க்கை பெற்ற முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 1ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என்றும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேவேளையில், ஏற்கனவே படித்து வரும் இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு ஜூன் 15ஆம் தேதியே வகுப்புகள் மறுதொடக்கம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.




