அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: திண்டுக்கல்லில் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ அரசு ஆய்வுக்கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் கலந்துகொண்ட சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி மற்றும் அனைத்துத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மேடையில், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டுமே பிரத்யேக இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், எவ்வித அரசுப் பொறுப்பிலும் இல்லாத தவெக திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் தர்மராஜ், விதிமுறைகளை மீறி மேடையில் அமைச்சர் விக்னேஷின் இருக்கைக்கு அருகிலேயே அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நாற்காலியில் அதிரடியாக அமர்ந்தார். மேலும், அவருடன் வந்த தவெக முக்கிய நிர்வாகிகளும் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றனர். மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் மட்டுமே பங்கேற்க வேண்டிய முக்கியத்துவமிக்க அரசுப் பணிக்கான ஆய்வுக்கூட்டத்தில், அரசியல் கட்சி நிர்வாகிகள் மேடையைப் பகிர்ந்துகொண்டது அங்கு கூடிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



