தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்த மேயர் பிரியா: புளியந்தோப்பு அரசு விழாவில் வெடித்த பனிப்போர்!
சென்னை:
சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு பள்ளி புதிய கட்டடத் திறப்பு விழாவில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் பல்லவி ஆகிய இருவருக்கும் இடையே நேரடி பனிப்போர் வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரு.வி.க. நகர் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பில் இயங்கி வரும் சென்னை மாநகராட்சிப் பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற மேயர் பிரியா, முறைப்படி குத்துவிளக்கை ஏற்றி வைத்தார். அப்போது, குத்துவிளக்கேற்றப் பயன்படுத்திய மெழுகுவர்த்தியை அங்கிருந்த தவெக எம்எல்ஏ பல்லவியிடம் தராமல், அருகில் இருந்த ஐஏஎஸ் (IAS) அதிகாரிடம் நேரடியாகக் கொடுத்துவிட்டார்.
இதனால் கடும் அதிருப்தியடைந்த எம்எல்ஏ பல்லவி, மக்கள் பிரதிநிதியான தனக்கு அங்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாக உணர்ந்து, விழாவைப் புறக்கணித்துப் பாதியிலேயே வெளியேறினார். இதன் தொடர்ச்சியாக, சென்னை நம்மாழ்வார்பேட்டையில் ரூ.2.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தொடக்கப் பள்ளி கட்டடத் திறப்பு விழாவிலும் இருவருக்கும் இடையே மோதல் நீடித்தது. இந்த விழாவில் மேயர் பிரியா குத்துவிளக்கை ஏற்றிவிட்டு, மெழுகுவர்த்தியை எம்எல்ஏ பல்லவியிடம் நீட்டியபோது, முந்தைய சம்பவத்தால் அதிருப்தியில் இருந்த பல்லவி அதனை வாங்க மறுத்து, “தாங்களே ஏற்றுங்கள்” எனக் கூறி மேயரை அலட்சியப்படுத்தியுள்ளார். அடுத்தடுத்து நடைபெற்ற இரு அரசு விழாக்களில் மேயர் மற்றும் எம்எல்ஏ இடையே அரங்கேறிய இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.




